TN RAIN: மக்களே உஷார்..! இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தொடங்கி வரும் 6ம் தேதி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையின் படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
04.01.2023 முதல் 06.01.2023 வரை: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 2, 2023
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கூடுதல் பருவமழை பதிவு:
இதனிடையே, வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் வழக்கமாக 440.30 மில்லி மீட்டர் மழை பதிவாவது வழக்கம். அதன்படி, இந்த பருவமழை காலத்தில் வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது.





















