கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அதிபர்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த சிறு சேமிப்புகளையும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்து தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இதில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச்சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறை திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன். திருவள்ளுவரின் குறள் நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களையும் நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 32 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் 36 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 33 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிய கொரோனா பாதிப்பு இன்று 31 ஆயிரத்து 709 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த சென்னை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மொத்தம் 28 ஆயிரத்து 317 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 87 ஆயிரத்து 314 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 348 நபர்கள் ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இன்று குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 474 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 486 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழந்தவர்களில் 224 பேர் தனியார் மருத்துவமனையிலும், 262 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 6 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 117 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.
4 மகன்கள் கொரோனாவால் உயிரிழந்ததை கேட்ட அதிர்ச்சியில் தாய் மரணம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், இவரது மனைவி, பாப்பாள். அவருக்கு வயது 70. இவர்களுக்கு தங்கராஜ், 52, ராஜா, 50, சவுந்திரராஜன் 40 மற்றும் தெய்வராஜன் 45 என நான்கு மகன்கள். நான்கு பேரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் உறவினர் ஒருவரின் இறப்பிற்காக துக்கம் விசாரிப்பதற்காக தெய்வராஜ் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெய்வராஜ், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 9-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சாந்தா (35) அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்தார். இவர்கள் மட்டுமின்றி, தெய்வராஜின் சகோதரர்களான தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களின் தாயார் பாப்பாள் மிகவும் வயதானவர் என்பதால் மகன்கள் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்த தகவலை அவரிடம் உறவினர்கள் கூறவில்லை. இருப்பினும் மகன்கள் யாரும் பார்க்க வராததால் சந்தேகம் அடைந்த பாப்பாள் உறவினர்களிடம் தொடர்ந்து தனது மகன்களை பற்றி கேட்டுள்ளார். அப்போது, உறவினர்கள் பாப்பாளிடம் அவரது 4 மகன்களும், ஒரு மருமகளும் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்த தகவலை கூறியுள்ளனர். இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த பாப்பாள், அன்று இரவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்கள் 4 பேர், மருமகள் என 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி அதே பகுதியில் வாழும் சகோதரர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஒரே ஊரில் அடுத்தடுத்து 7 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக அப்பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை அரசு சார்பில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவால் ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் உயிரிழப்பு
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாட்டில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெரியவர்கள் என பல தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு, அந்தியூரைச் சேர்ந்தவர் ராமன், 56 வயதான இவர் ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்
தமிழகத்தில் கொரோனா பரவலின் பாதிப்ப தினசரி 33 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதே அளவில்தான் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றின் பாதிப்பு ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்றின் தாக்கம் சில மாவட்டங்களில் காணப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இருப்பினும் கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய வல்லுனர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்த குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ கருப்பு பூஞ்சை நோய், ஸ்டீராய்டு கொடுப்பதால் ஏற்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று கருப்பு பூஞ்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரி நியமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கருப்பு பூஞ்சை நோய் குறிப்பாக கண்கள், மூக்கு, மூளையை பாதிக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் வியாதி. கொரோனாவிற்கு பின் இந்த வியாதி வரவில்லை. மேலும், கருப்பு பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். எனவே, மக்கள் யாரும் கருப்பு பூஞ்சை குறித்து பயப்படத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலிலே இதனை கண்டுபிடித்தால் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த முடியும். மேலும், கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டவர்களில் 75 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள். கருப்பு பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தவும், இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையால் அச்சத்தில் மக்கள் உள்ளன்ர. இந்த சூழலில், தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

