Holiday Special Bus : கொத்தாக வரும் விடுமுறை.! மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
Holiday Special Bus : பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தொடர் விடுமுறையானது வரவுள்ளதையடுத்து சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படவுள்ளது.

தொடர் விடுமுறை - மாணவர்கள் கொண்டாட்டம்
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறையானது தொடங்கவுள்ளது. இதனையடுத்து சுற்றுலா செல்வதற்கும், உறவினர்கள் வீட்டிற்கும் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை 17/04/2026 (வெள்ளிக்கிழமை) 18/04/2026 (சனிக்கிழமை) மற்றும் 19/04/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/04/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 18/04/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 17/04/2026 மற்றும் 18/04/2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/04/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், 18/04/2026 (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும். ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணம் செய்யுங்கள்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,072 பயணிகளும் சனிக்கிழமை 6,710 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,296 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















