வாக்காளர் பட்டியல் திருத்தம்: குழப்பமா? தேர்தல் ஆணையம் விளக்கம்! உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழ்நாடு : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் துவங்கிப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . இதில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பான செயல்பாடுகளுக்கு, வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து, இங்குள்ள 80654 20020 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து விளக்கம் பெறலாம். வார் ரூமிற்கு ஒரே 600க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அப்போது, பொதுமக்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது போன்று, பல தரப்பிலும் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த விளக்கம்:
2002ல் வாக்களித்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாறி குடியேறியிருந்தால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?
வாக்காளர் இன்றைக்கு எந்த முகவரியில் இருக்கிறாரோ, அந்த இடத்திற்கு தான் கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கப்படும். 2002ம் ஆண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்ற தகவல் மட்டுமே, அப்போது சரிபார்க்கப்படும்.
மனைவியின் வாக்குரிமை, அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரிக்கு ஆதாரமாக, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை என இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவற்றை ஏற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியுமா?
கணக்கெடுப்பின் போது, இதுபோன்ற எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.
படிவத்தில் உறவினர் குறித்த தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா?
- தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரை பதிவு செய்தால் மட்டும் போதும்.
வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
வாக்குச்சாவடி அலுவலரிடம், படிவம் - 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாது. அதன்பின், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, இறுதி பட்டியலில் சேரலாம்.
குடும்பத்தில் எவரேனும் வெளிநாட்டில் வேலையில் இருந்தால், அவருடைய படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது?
வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பத்தார், அந்த படிவத்தை பூர்த்தி செய்து தரலாம். 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்த தகவல் முறைப்படி தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்படும்.
கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், பெற்றோர் பெயர் இடம் பெறவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும்?
தாத்தா, பாட்டி பெயர் இருந்தால் குறிப்பிடலாம். அதுவும் இல்லையென்றால், ஒன்றும் பிரச்னையில்லை.
கணக்கெடுப்பு படிவத்தில் தேவைப்பட்டால், புதிய புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டும் போதும். பின்னர், 13 ஆவணங்களில் ஒன்றை சமர்பித்துக் கொள்ளலாம்.
கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால், மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா?
புதிய படிவம் வழங்கினால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, தவறாக எழுதியிருந்தால், அதை அடித்துவிட்டு, திருத்திக் கொடுக்கலாம்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. இதனால், படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரி செய்வது?
இப்போது கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணி மட்டுமே நடக்கிறது. விரைவில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள், தேவையான உதவிகளை வாக்காளர்களுக்கு வழங்குவர்.
உதவி மையம்
ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அணுகலாம் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
மாவட்டங்களின் எஸ்.டி.டி SSD code கோடு இருந்தால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் போது, நேரடியாக அந்த மாவட்டத்தின் உதவி மையத்திற்கு அழைப்பு செல்லும். அங்கு, தேவையான விளக்கங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





















