![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajiv Gandhi Case:"அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது" - 6 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Rajiv Gandhi Case: நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![Rajiv Gandhi Case: Rajiv Gandhi Case supreme court direct release of nalini and six members Rajiv Gandhi Case:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/fd290cdb5753e1d0f9f075e4f4da552b1668160238170571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களாட்சி கோட்பாட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்துள்ளது என தெரிவித்தார்.
பின்னணி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளன் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
"6 பேரின் விடுதலையை வரேவேற்கிறேன்"
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
"பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய். நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது” என்றார்.
”அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது”
மேலும் அவர் கூறியதாவது, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
”திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்குபோதும் ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது” என்றார்.
”தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம்" என்று தெரிவித்தார்.
”சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி”
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, " மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். இந்நிலையில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது” என்றார்.
”அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன். முருகன் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)