புதுச்சேரியில் சூரிய ஒளி மின் திட்டம்: ₹1.08 லட்சம் மானியம்! மின்சார சிக்கனத்தில் அசத்தலான வாய்ப்பு!
புதுச்சேரியில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தின்' கீழ் 3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான மானியத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தியுள்ளன.

புதுச்சேரி: புதுச்சேரியில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தின்' (PM Surya Ghar) கீழ் 3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான மானியத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தியுள்ளன.
புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் சூரிய ஒளி மின் திட்டத்தில் (PM Surya Ghar), 3 கிலோவாட் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு வழங்கும் மானியம் ₹78 ஆயிரத்துடன், மாநில அரசு சார்பில் ₹30 ஆயிரம் சேர்ந்து மொத்தம் ₹1.08 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் மின்சாரம் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்க அனல் மின் நிலையங்களில் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களை எரிப்பதாலும், அணு மின் நிலையங்களில் அணுவைப் பிளப்பதாலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இதனைத் தவிர்த்திட, ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காகப் பிரதமர் மோடி, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில், ₹75 ஆயிரம் கோடி முதலீட்டில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை' கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மானியம் மற்றும் கடனுதவி விவரங்கள்:
இத்திட்டத்தில் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு பின்வருமாறு மானியம் வழங்குகிறது.,
1 கிலோவாட்: ₹30,000
2 கிலோவாட்: ₹60,000
3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: ₹78,000
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 6 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்குகின்றன.
வருமானம் ஈட்டும் வாய்ப்பு:
3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைத்தால் ஆண்டிற்குச் சுமார் 4,500 யூனிட் மின்சாரத்தைப் பெறலாம். நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்த மின்சாரத்தைத் தேவைக்குப் போக, உபரி மின்சாரத்தை மின்துறைக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும்.
பொதுமக்கள் இத்திட்டத்தைப் பற்றி அறிய மின்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 3,428 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2,475 பேர் மின் நிலையம் அமைத்து, மத்திய அரசின் மானியத்தைப் பெற்றுள்ளனர்.
மாநில அரசின் கூடுதல் மானியம்:
புதுச்சேரி அரசு இத்திட்டத்தை ஊக்குவிக்கச் சிறப்பு மானியமாக அதிகபட்சம் ₹30 ஆயிரம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:
பொதுமக்களின் முதலீட்டுச் சுமையைக் குறைக்க மாநில அரசு தன் பங்காக 1 கிலோவாட்டிற்கு ₹10 ஆயிரம், 2 கிலோவாட்டிற்கு ₹20 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ₹30 ஆயிரம் கூடுதல் மானியம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. மாநில அரசின் இந்த மானியம், முதலில் இணையும் 13 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் மொத்த மானியத் தொகை பின்வருமாறு உயர்கிறது: 1 கிலோவாட்: ₹40,000, 2 கிலோவாட்: ₹80,00 , 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: ₹1.08 லட்சம் இந்தச் சலுகை, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மின் நிலையம் அமைத்தவர்களுக்கும் பொருந்தும்.
பதிவு செய்வது எப்படி?
இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தைத் தேர்வு செய்து, மின் நுகர்வோர் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:
தொலைபேசி: 94890-80373, 94890-8037
இணையதளம்: eezped.py.gov.in























