இனி டீசல் இல்லை! இடி சத்தம் இல்லை! புதுவை முழுவதும் விரையும் 75 இ-பஸ்கள்.. மத்திய அரசின் மாஸ் திட்டம்!
புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ. 20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது.

புதுச்சேரி: பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. .
புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகள்
பிரதம மந்திரி இ-பேருந்து சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 10,000 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25 ஆம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரூ. 57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ. 20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீதத் தொகையை, இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே ஏற்கும். இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பேருந்துகள் மூலம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஆளுநர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பேருந்துகளை ப் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையிலும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பேருந்துகளைப் புதுவை நகரப் பகுதிகளுக்குள்ளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரிலும், மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பேருந்துகளின் ஓட்டுநர்களை நியமிப்பதுடன்பேருந்துகளுக்கான பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்வார்கள். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும்.
எலெக்ட்ரிக் பேருந்துகள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.
பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்கிடையே, ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





















