EB BILL HIKE: மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தந்த ஷாக் விளக்கம்
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Electricity Charges Hike: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா - Power Tariff Hike
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும், ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது.
மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்:
தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்வா?
அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பல்வேறு அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, மின் கட்டணம் உயர்த்தப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.





















