ரயிலில் காவலரின் அநாகரீக செயல் !! துணிச்சலான மாணவியின் அதிரடி வீடியோ பதிவு
ரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்...வீடியோ பதிவு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்.

ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி
கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சேக் முகமத். இவர் அலுவல் ரீதியான பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து கோவை வரும் 'இன்டர்சிட்டி' ரயிலில் பயணம் செய்தார். அதே ரயிலில், சென்னையில் சட்டக் கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வீடியோ பதிவு செய்த மாணவி
ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது, சீருடையில் இருந்த காவலர் சேக் முகமத், தனது அருகில் அமர்ந்திருந்த மாணவியிடம் அநாகரீகமான முறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பதற்றப்படாமல் தனது செல்போன் மூலம் காவலரின் சில்மிஷங்களை வீடியோவாகப் பதிவு செய்தார். தப்பிக்க வழி தேடாமல், ஆதாரத்துடன் அவரைப் பிடிக்க மாணவி துணிச்சலாகச் செயல்பட்டார்.
போலீஸ் மீது வழக்கு பதிவு
உடனடியாக மாணவி இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த போலீசார் சேக் முகமத்தை ரயிலிலிருந்து தரதரவென இறக்கினர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதோடு, மாணவியின் புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சேக் முகமத்தை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.





















