யாரும் வந்துராதீங்க.. ஓட்டு போட மாட்டோம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலைவெறி தாக்குதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி படுகொலை சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செயல்படும் டீக்கடை ஒன்றில் கடந்த இரண்டு தினங்கள் முன்பு தமிழகமே அதிரும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. அதன்படி 3 பைக்குகளில் அங்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென பெட்ரோல் குண்டுகளை டீக்கடை முன்பு வீசியது. இதனைக் கண்டு அங்கிருந்து சிதறி ஓடியவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது.
இதில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேசமயம் அப்பகுதி வழியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொதுமக்கள் மறியல் - 7 பேர் கைது
இதனிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரும்பத்து கிராம மக்கள் சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடினர். அதேசமயம் 400க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றியுள்ள கிராமத்தில் பதற்றத்தை தணிக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னால் நடந்த சம்பவங்களில் இரு தரப்புக்கும் இருந்த முன்பகை காரணமாக பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மதுரை சிறையில் இருக்கும் ரவுடி ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் உயிரிழந்த ஜானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் இன்று சென்றார். ஆனால் அவரது காரை வழிமறித்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக நாங்கள் போராடிய போது நீங்கள் எங்கு சென்றீர்கள், நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம்.. ஓட்டு கேட்டு யாரும் வராதீங்க என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ரூபி மனோகரன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















