TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறை பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் வரும் சனிக்கிழமை அதாவது 20 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
18.01.2024 மற்றும் 19.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகாலை நேரங்களில் கடும் பனி நிலவுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறை பனியாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால் குளிர் காலம் தாமதமாகி கொண்டே வந்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் மழை இல்லாத இரண்டு நாட்கள் மட்டுமே உறைப்பனி பொழிவு காணப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் உறைப்பனி தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைப்பணி படிந்து காணப்பட்டது.
இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், காந்தள், தலைக்குந்தா , அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.
உறை பனி பொழிவு காரணமாக உதககை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















