சென்னை மக்களுக்கு நிம்மதி.! பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் ரூ.114 கோடியில் புதிய மேம்பாலம்- எப்போ வருது.?
New flyover SRP Tools junction Perungudi : போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வரும் பெருங்குடி மற்றும் SRP டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.113.80 கோடி மதிப்பீட்டில் அமைக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவே பல மணி நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் ஐடி நிறுவங்கள் அதிகமாக இருக்கும் பெங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் கேட்கவே வேண்டாம். எனவே அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருங்குடி சந்திப்பு மற்றும் SRP டூல்ஸ் சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.113.80 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டும் ஒப்பந்தத்தை M. ராஜ்குமார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் மேம்பாலம்
சேவை சாலைகள் (Service roads). மின்சாரப் பணிகள், வடிகால் அமைப்புகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்பாலங்களை (Grade Separators) வடிவமைத்துக் கட்டுவதற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இந்த மேம்பால பணிகள் முடித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. OMR பகுதியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் உயர்மட்ட மெட்ரோ இரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை வைப்புத்தொகை (Deposit terms) அடிப்படையில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலமானது. எம்.ஜி.ஆர் பிரதான சாலையிலிருந்து ஒரு பிரத்யேகச் சாய்வுப் பாதையை (Ramp) கொண்டிருக்கும். இது சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும் அதேபோல், SRP டூல்ஸ் சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலம், OMR-லிருந்து வேளச்சேரி தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும் இதன் மூலம் அந்தச் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து சீராகும்.
ரூ.113.80 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள்
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், OMR சாலையில் உள்ள இரண்டு முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்தைச் சீரமைப்பதோடு வேளச்சேரி, தரமணி, பெருங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐடி காரிடார் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் இந்தத் திட்டம் தினசரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்குப் பயனளிப்பதோடு சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான இப்பகுதியில் வாகனங்கள் மிகவும் சீராகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு வழிவகுக்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.























