ஆரோவிலில் விரைவில் அன்னையின் கனவு நகரம் - உறுதி அளித்த ஆளுநர் தமிழிசை!
அன்னையின் கனவு நகரம் விரைவில் உருவாக்கப்படும் என்று ஆரோவில் சமுதாய உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரில் ஆரோவில் சமுதாய உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் புதுவை மாநில ஆளுநரும், ஆரோவில் நிர்வாகக் குழு உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இதில் ஆரோவில் பவுன்டேஷன் செயலர் ஜெயந்தி ரவி உள்பட பலர் உடனிருந்தார்.
அன்னை கனவு நகரம்:
முன்னதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமாதான பூமியான ஆரோவில் நகரை அன்னை 1968-ம் ஆண்டு தொடங்கினார். உலகிற்கு ஒரு மகுடம் போல இந்த நகரம் உருவாக வேண்டும். இங்கு 50 ஆயிரம் பேர் வாழ வேண்டும். இந்த நகரம் உலகத்திற்கு ஒரு உதாரணமான அமைதி நகரமாக விளங்க வேண்டும். பாலின, நாடு, சாதி, மத வேற்றுமைகள் இல்லாமல் வாழக்கூடிய ஒற்றுமை நகரமாக இது அமைய வேண்டுமென்றும் அன்னை நினைத்தார்கள். துரதிஷ்டவசமாக அவரது கனவு இன்று 50 ஆண்டுகள் கடந்தும் நிறைவேறவில்லை. அன்னையின் கனவு முழுமை அடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது. திட்டமிட்டது போல் பணிகள் நடைபெறுகிறது. அன்னையின் கனவு நகரம் வெகுவிரைவில் உருவாக்கப்படும்.
இயற்கையை அழிக்கவோ, குழப்பம் ஏற்படுத்தவோ, இங்கு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும் என்றோ எந்த நோக்கமும் கிடையாது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்போது சிறு பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தான் நாங்களும் சந்திக்கிறோம். சில இடங்களில் போதைப்பொருள் நடமாட்டம் போன்ற சில சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறுகிறது. அதையும் களைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நிர்வாகக்குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆரோவில்லில் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படுகிறது. கனவுத்திட்டத்தை பசுமை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய மரங்கள் நடப்படுகின்றன. இங்கு சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். எண்ணிக்கையை குறைத்து கண்காணிக்கப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குழப்பத்தை ஏற்படுத்தி வருபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets