'MONTHA' Cyclone Update: தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா‘; மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் எவை.? வானிலை ரிப்போர்ட்
மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மோன்தா புயல் உருவான நிலையில், அது தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மோன்தா‘ புயல்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த 26-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ‘மோன்தா‘ புயலாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய நிலையில், அது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது மசூலிப்பட்டினத்தில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.
மோன்தா புயல் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக ஆந்திராவில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீடும் எனவும், பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை தொடரும்
மோன்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னையில் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று எந்த மாவட்டங்களில் கனமழை
இந்த சூழலில், மோன்தா புயல் காரணமாக, நேற்று முதலே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















