நோ சொல்லும் உதயநிதி.. அடம்பிடிக்கும் சீனியர்கள்! மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? மாட்டாரா?
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதில் உதயநிதிக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே மாற்றுக்கருத்து நிலவி வருகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் சட்டமன்ற தொகுதிகள் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?
இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையேதான் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் கொளத்தூரில் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் களமிறங்குவார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அடம்பிடிக்கும் சீனியர்கள்:
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து திமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம், கட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் இந்த முடிவிற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தோற்றால் என்ன ஆவது?
பொதுவாக, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது என்பதே வரலாறாக இருந்து வருகிறது. தவெக புதிய கட்சி, முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கட்சி என்றாலும் விஜய் மீதான எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது. இதனால், இடைத்தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் நின்று தோல்வி அடைந்தால் அது திமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்குவதுடனும், மு.க.ஸ்டாலின் இனிமேல் தேர்தல்களில் போட்டியிடவே முடியாது என்ற மோசமான சூழலும் உண்டாகும் என்று சிலர் கருதுகின்றனர்.
இதுமட்டுமின்றி, மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அனுதாபத்திலே அவர் வெற்றி பெற்றார் என்ற வாதமும் உண்டாகும் என்றும் கருதுகின்றனர். தற்போது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த பிறகு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களும், திமுக-வினரும் கொளத்தூர் மக்களை விமர்சித்து வருகின்றனர். அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் ஒருவேளை மு.க.ஸ்டாலின் தோற்று அந்த தொகுதி மக்களையும் திமுக விமர்சித்தால் அது மேலும் பின்னடைவை திமுக-விற்கு உண்டாக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
நோ சொல்லும் உதயநிதி:
தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்கால திமுக-வின் தலைவராக கருதப்படுபவருமான உதயநிதியும் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம் கருதியே உதயநிதி தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும், சீனியர்கள் சிலர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
திமுக-வின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக மூத்த உறுப்பினர்களின் அலட்சியமும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுமே காரணம் என்று உதயநிதி கருதுகிறார். அவர்கள் மு.க.ஸ்டாலின் வாயிலாக தங்களது ஆதிக்கத்தை கட்சியில் நிலைநாட்ட தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். திமுக-வின் எதிர்காலம் கருதி அந்த மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட உதயநிதி முடிவு எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதுவாகினும் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலில் மு.க.ஸ்டாலின் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















