Minister Ramesh: கோயில்களில் அடுத்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை.. மக்கள் மகிழ்ச்சி!
தன் மீதான விமர்சனங்களை எல்லாம் பற்றி கவலைப்படாமல் அமைச்சர் ரமேஷ் கோயில்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில்களில் அதிரடியாக ஆய்வு நடத்தினார்

தமிழக கோயில்களில் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய அமைச்சர் ரமேஷ் அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து துறை அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்த துறையின் அமைச்சராக சேகர்பாபு செயல்பட்டார். அப்போது தமிழ்நாடு முழுக்க கோயில்களில் பல்வேறு விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக கோயிலுக்கு சென்று நிம்மதியாக சாமி தரிசனம் கூட செய்ய முடியவில்லை என நொந்து கொண்டனர்.
இப்படியான நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதவியேற்றதும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைச்சர் என தெரியாமல் அவரிடமே விரைவு தரிசனம் செய்ய பணம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து திருவனைக்காவல் கோயில் சென்று அங்கு பிரசாத உணவுகள் விற்கும் கையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு விற்கப்படும் உணவுகளின் தயாரிப்பு தேதி தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் கடுமையான கிண்டலுக்குள்ளானது.
பக்தர்கள் நிம்மதி
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களை எல்லாம் பற்றி கவலைப்படாமல் அமைச்சர் ரமேஷ் தொடர்ச்சியாக கோயில்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில்களில் அதிரடியாக ஆய்வு நடத்தினார். அங்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்களிடமும், பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களிடமும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடு தொடர்பான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ் அங்கு பொருட்களின் விலைப்பட்டியல் இல்லாததைக் கண்டு பல்வேறு கேள்விகளை கடை உரிமையாளரிடமும், கோயில் ஊழியர்களிடமும் எழுப்பினார். இதில் தவறு நடைபெற்றுள்ளதை கண்டறிந்த அமசிசர் அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினார். உடனடியாக அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்கவும் உத்தரவிட்டு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதனடிப்படையில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்த கள்ளழகர் கோயிலில் உடனடியாக விலைப்பட்டியல் வைக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் வைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை வழிபாட்டு பொருட்களை இருமடங்கு விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















