![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 529 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
![Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 529 கன அடியாக உயர்வு Mettur dam's flow to increase again - rise to 529 cubic feet per second. Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 529 கன அடியாக உயர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/07/651c318d671e7044b01773d6319fb3861717728576429113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 286 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 239 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 529 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 44.62 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 14.59 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)