Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக திகழும். மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தவெக ஆச்சரியம் அளிக்கும்
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பேசினார். அதில், "தேர்தல் முடிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நான்கு கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. ஒரு கருத்துக் கணிப்பு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக உள்ளது. மற்றொரு கருத்துக் கணிப்பு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறது. இப்படியாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னுடைய நம்பிக்கை திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக திகழும். மேலும் அது ஆச்சரியங்களை அளிக்கக்கூடும். முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவாக ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
எனது மிகப்பெரிய சாதனை
மே தினம் பற்றி வைகோ பேசுகையில், “1886 ஆம் ஆண்டு மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்ற தங்களது உரிமைகளைக் கோரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது தொழிலாள வர்க்கத்தின் இந்த மாபெரும் எழுச்சியை அடக்க காவல்துறையும் இராணுவமும் தங்கள் பலத்தைப் பயன்படுத்தின. இதில் பலர் கொல்லப்பட்டனர். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானபோது, அவர் மே 1 ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்து அதைக் கொண்டாடினார். 1990 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி, மே தினத்தை மத்திய அரசு விடுமுறையாக அறிவிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் அதற்கு இணங்கி, அதே நாளில் அதை அறிவித்தார். எனது பொது வாழ்வில், மே 1 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது எனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்" என தெரிவித்தார்.
பாஜக ஊடுருவ முயற்சி
2026 ஆம் ஆண்டு கேரளா மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் குறித்த கேள்விக்கு, " இரு மாநிலங்களிலும் பாஜக ஊடுருவ முயற்சிக்கிறது. கேரளாவில் அது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களால் முடியாது. ஆனால் மேற்கு வங்கத்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கலாம். இருந்தாலும் நாம் பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும்” என்றும் வைகோ கூறினார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















