Trichy East: "அரசனை நம்பி புருஷனை விட்றாதீங்க.." விஜய்யை விமர்சித்த துரை வைகோ!
திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த துரை வைகோ அந்த தொகுதியில் போட்டியிடும் விஜய்யை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக ஆகிய 4 கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற களத்தில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் பலரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.
திருச்சி கிழக்கு:
தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் விஜய்யின் வெற்றி வாய்ப்பு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
பெரம்பூரில் இனிகோ இருதயராஜுற்கு ஆதரவாக வைகோவின் மகனும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
விஜய்யை விமர்சித்த துரை வைகோ:
எனக்கு இந்த தொகுதி மக்கள் எல்லாரும் ஓட்டு போட்டீங்க. எனக்காக இந்த தொகுதி எம்எல்ஏ-க்கள் வெயில் எல்லாம் பார்க்காமல் அந்த தீப்பெட்டிச் சின்னத்தை 10 நாள் கொண்டு போய் சேர்த்தோம். இனிகோ இருதயராஜ் கையில் பிடித்த தீப்பெட்டிச் சின்னத்தை கடைசி வரை கீழே இறக்கவில்லை. துரை வைகோ என்றைக்கும் நன்றி மறக்கமாட்டேன். நானும் நன்றி மறக்கமாட்டேன்.
விண்ணில் ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் கிழக்கில் உதிக்கும் ஒரே சூரியன் உதயசூரியன். 11.19 விழுக்காக அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இனிகோ இருதயராஜை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். நூறுக்கணக்கான கோடி திட்டத்தை இனிகோ கொண்டு வந்துள்ளார். அரசனை நம்பி புருஷனை விட்ரக்கூடாது. விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக 5 வருடம் உழைத்துள்ளார் இனிகோ இருதயராஜ். அவர் மக்கள் சேவகனாக உங்கள் ஊழியனாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீவிர பரப்புரை
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு பரப்புரையில் விஜய் ஈடுபட்டார். அதன்பின்பு, விஜய் தற்போது வரை திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபடவில்லை. அவரது சார்பில் தவெக-வினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தமட்டில் திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் இனிகோ இருதயராஜிற்காக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் விஜய் களமிறங்கியுள்ள திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடுத்த வாரம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அசாம், கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















