மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பெண்களுக்கான 'உள்ளகக் குழு' அமைக்க தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மயிலாடுதுறை: பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டாயம் 'உள்ளகக் குழு' (Internal Committee) அமைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பான பணியிடம்: சட்டத்தின் அவசியம்
பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து வரும் இன்றைய சூழலில், அவர்கள் பணியாற்றும் இடங்களில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுவதை உறுதி செய்வது சட்டப்பூர்வ கடமையாகும். இதற்காக, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம், 2013’-ன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் உள்நாட்டுக் குறையீட்டுக் குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
யாரெல்லாம் குழு அமைக்க வேண்டும்?
மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி:
*அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்.
* தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்.
*பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்கள்.
*மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்.
10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் (பெண்கள் உட்பட) பணிபுரியும் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் இந்த 'உள்ளகக் குழு' அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளகக் குழுவின் அமைப்பு: விதிகள் என்ன?
இந்தக் குழு வெறும் பெயரளவில் மட்டும் இல்லாமல், சட்ட விதிகளின்படி முறையான உறுப்பினர்களைக் கொண்டு அமைய வேண்டும்:
* தலைவர்: நிறுவனத்தின் மூத்த நிலையில் உள்ள ஒரு பெண் அதிகாரி தலைவராக இருக்க வேண்டும்.
* உறுப்பினர்கள்: மகளிர் நலனில் அக்கறை கொண்ட அல்லது சமூகப் பணியில் அனுபவம் வாய்ந்த அல்லது சட்ட அறிவுள்ள ஊழியர்களில் இருந்து குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
* வெளி நபர்: மகளிர் நலனுக்காகப் பாடுபடும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த (NGO) ஒரு பிரதிநிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களை நன்கு அறிந்த ஒரு வெளி நபர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
* பெண்களின் பிரதிநிதித்துவம்: குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பது கட்டாயமாகும்.
ஆன்லைன் பதிவு மற்றும் கண்காணிப்பு
குழு அமைத்தவுடன் அதன் விவரங்களை ரகசியமாக வைக்காமல், முறைப்படி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
* நிறுவனங்கள் தங்களின் உள்ளகக் குழு விவரங்களை www.socialwelfare.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் ஒரு நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிமீறல்களுக்கான தண்டனை
சட்டத்தை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். குறிப்பாக உள்ளகக் குழு அமைக்கத் தவறுவது, பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மாவட்ட ஆட்சியருக்கு ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் இருப்பது. இவற்றைக் கண்டறியும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு முதற்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்
இது குறித்த சந்தேகங்கள் அல்லது வழிகாட்டுதல்கள் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்:
மாவட்ட சமூக நல அலுவலகம், 5-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை.
தொலைபேசி எண்: 04364-212429
மின்னஞ்சல்: dswomaynd@gmail.com/ dcpo.mynd@gmail.com
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் உடனடியாக இக்குழுவை அமைத்து, பெண்களுக்கான பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கிட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
























