(Source: Poll of Polls)
Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
திருவள்ளூரில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரிய எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், அவர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூரில், காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையல், புகாரில் முகாந்திரம் உள்ளதாகக் கூறி, முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இதையடுத்து, ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீயின் காதல் திருமண விவகாரத்தில், தனுஷின் சகோதரரை கடத்திய புகாரில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதே வேளையில், கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார், அதற்குப் பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை, நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
முன் ஜாமின் மனு மீது இன்று நடந்த விசாரணை
நேற்று அந்த முன்ஜாமின் மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார், அதனால், முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார். நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என ஜெகன் மூர்த்தியிடம் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் என்றும், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால், முன்ஜாமின் வழங்கக்கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஜெகன் மூர்த்திக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை என்பதால், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி
இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி, முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளதால், ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















