Thagaisal Thamizhar Award: தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு; அரசு அறிவிப்பு
குமரி அனந்தனைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
![Thagaisal Thamizhar Award: தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு; அரசு அறிவிப்பு Kumari Ananthan Selected for Tamil Nadu Government Thagaisal Thamizhar Award Thagaisal Thamizhar Award: தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு; அரசு அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/05a825eacb2159caccc95780aee5aab31722500710238332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தகைசால் தமிழர் விருதிற்கு, விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு விருது வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
“தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.
இந்த விருது கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம்
இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது.
பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மல்
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்“.
இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)