Karur Stampede: ''ஆபத்தான சக்தி விஜய்; திமுகவுக்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங்?'' திருமா பரபரப்பு பேச்சு!
3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை சொல்லித்தான் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ஹஸ்கி வாய்ஸில் பேசி வீடியோ வெளியிட்டால் சோகம் என்று மக்கள் நம்புவார்கள் என விஜய் நினைக்கிறாரா?- திருமா

விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? அரசும் காவல்துறையும் அவரைக் கண்டு அச்சப்படுகிறதா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
’’அண்ணா ஹசாரேவைப் பயன்படுத்தி டெல்லியில் ஆட்சிக்கு வந்ததைப்போல, விஜயைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முயற்சி செய்கிறது. விஜயைப் பாதுகாக்க பாஜக முயல்கிறது. விஜயின் சாயம் வெளுத்துவிட்டது.
ஆபத்தான சக்தி விஜய்
3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை சொல்லித்தான் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ஹஸ்கி வாய்ஸில் பேசி வீடியோ வெளியிட்டால் சோகம் என்று மக்கள் நம்புவார்கள் என விஜய் நினைக்கிறாரா? கழுத்தை நெரித்துக் கொன்றதற்கும் கல் வீசியதற்கும் ஸ்பிரே அடித்ததற்கும் ஆதாரம் உள்ளதா? விஜய் போன்ற ஆபத்தான சக்தியிடம் சிக்கினால் தமிழகம் கலவர பூமியாகி விடும்.
விஜயைச் சுற்றி இருக்கும் அனைவரும் பாஜக பயிற்சிப் பட்டறையில் பாடம் பயின்றவர்கள். விஜயைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு, அந்த இடத்துக்கு வர பாஜக முயற்சி செய்கிறது.
அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா?
விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா? திமுகவுக்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங் என்று சொல்லலாமா? விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாதது என்று அழுத்தம் கொடுத்தது யார்?
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஏன் விஜய் மீதும் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை? அவருக்கு ஒரு நீதி, இவர்களுக்கு வேறு நீதியா? விஜய்க்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது ஏன்? காவல்துறை பாரபட்சமாகச் செயல்படுவது ஏன்?’’
இவ்வாறு திருமாவளவன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.






















