JIPMER: புதுச்சேரி இளைஞர்களை புறக்கணிக்கும் வேலைவாய்ப்பு! திமுக போராட்டம் அறிவிப்பு, அதிர்ச்சி தகவல்!
வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து 8–ஆம் தேதி திமுக போராட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அறிவிப்பு

புதுச்சேரி : வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து 8–ஆம் தேதி திமுக போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்., ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்குகிறது. ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவம், இலவச மருந்துகள் போன்ற சேவைகளை பெறுவதற்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய ஒன்றிய அரசின் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பின்பற்ற தொடங்கியதன் காரணமாக மருத்துவ சேவையில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி தரமான சிகிச்சைகள் பெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளது.
படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம், இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவை தற்போது கட்டணமாக மாற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களை விழிபிதுங்கி நிற்க செய்துள்ளது. ‘சி’ பிரிவில் எடுக்க வேண்டிய பணியாட்களை ஒப்பந்த முறையில் கொடுத்து லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற, ஜிப்மரின் தன்னிச்சையான செயல்களால் பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்கள், மருத்துவ சேவையில் பிற மாநில மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஜிப்மர் நிர்வாகம் கொண்டு வந்த பயனாளர் சிகிச்சை கட்டண முறையை ரத்து செய்து மக்களின் சுகாதார உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும், கட்டாய இந்தி திணிப்புகள் மற்றும் ஜிப்மர் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் 2023–ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது.
இதையடுத்து அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்து பாராசிட்டமால் போன்ற அவசிய தேவைக்கு உண்டான மாத்திரைகள் கூட நோயாளிகளுக்கு கொடுக்க இருப்பு இல்லை என்பதும், கட்டணம் பெற்று மருத்துவ சிகிச்சை நடைபெறுவதையும் உறுதி செய்தார். பின்னர் சிறிது காலம் கண்துடைப்புக்காக கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல் ஒவ்வொரு சிகிச்சைக்கு என்று கட்டணம் நிர்ணயித்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. அதுவும் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு மட்டும் மருத்துவமும், மருந்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காப்பீடு இல்லாமல் வரும் ஏழை நோயாளிகளுக்கு வெளியில் மருந்து வாங்கிக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
பிரசவத்திற்கு வரும் பெண்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும் நோயாளிகள் மருந்துகள் வாங்க மணிக்கணக்கில் காத்திருந்து வாங்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். மீண்டும் இலவச மருத்துவ சேவை சிறப்பாக தொடர வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் விருப்பம். அதேபோல், ஜிப்மர் மருத்துவமனையில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செவிலியர் பணியிடம் புதுச்சேரி ஜிப்மரில் 446 இடங்களுக்கும், ஏனாம் ஜிப்மர் கிளையில் 8 இடங்களுக்கும் என 454 செவிலியர் பணியிடங்களுக்கு 22.07.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை புறக்கணிப்பு செய்யும் விதமாக தன்னாட்சி பெற்ற ஜிப்மர் நிர்வாகம், காலிப்பணியிடங்களை நிரப்ப சுயமாக தேர்வுகளை நடத்த முடியாமல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து நுழைவுத் தேர்வு நடத்துவது இதுவே முதல்முறை.
ஜிப்மர் தேர்வுகளை நடத்திய போது உள்ளூர் மக்கள் பல்வேறு பணியிடங்களில் நல்ல ஊதியத்துடன் பணியில் உள்ளனர். ஆனால், தற்போது செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் குரூப் 'பி' &'சி' தேர்வுகளுக்கு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் Common Recruitment Examination (CRE) என்ற தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை நடத்தி புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்களுக்கு அள்ளித்தரும் வாய்ப்பை கொல்லைப்புறமாக உருவாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 19 எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறார்கள். இதனால் செவிலியர்கள் மற்றும் குரூப் பி & சி ஊழியர்கள் உள்ளூர் மொழி, கலாச்சாரம் தெரியாமல் மேலும் நோயாளிகளை அலைக்கழிக்கும் நிலை தான் ஏற்படும் சூழல் வரும்.
ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கு சிறப்பு வயது தளர்வு, காலிப்பணியிடங்கள் மற்றும் பொதுத்தேர்வுகளில் (இருமொழி)- ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்ற புதுச்சேரி இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வில்லை. ஆனால் அதைச் செய்யாமல் ஜிப்மர் நிர்வாகம் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி, தொழில் சிகிச்சை நிபுணர், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 169 ‘பி’ குரூப் பதவிகளுக்கும், டெக்னீசியன், மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 209 ‘சி’ குரூப் பதவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான தேர்வை ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரியில் நடத்திய நிலையில், தற்போது செவிலியர் பணிக்கான தேர்வை (Nursing Officer Recruitment Common Eligibility Test) எய்ம்ஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன?.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















