ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்: தமிழகத்தில் இருந்து 23 புதிய ரயில்கள் இயக்கம்!
தமிழகத்தில் இருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தை உள்ளடக்கியதாக தெற்கு ரயில்வே மண்டலம் உள்ளது.
தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி இயக்கியுள்ளது. அத்துடன் ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் ரயில்களும் புதிய இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் புதிய ரயில் நிலைய நிறுத்தங்களையும் தெற்கு ரயில்வே செயல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருந்தும், வெளி மாநில நிலையங்களில் இருந்தும் என மொத்தம் 23 புதிய ரயில் சேவைகள் ஓராண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், கேரளத்துக்கு 14 ரயில்களும் கா்நாடகத்துக்கு 5 ரயில் சேவைகளும் உள்ளன. அத்துடன் கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் ஜல்பைகுரி-நாகா்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி அம்ருத் பாரத் விரைவு ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் விரைவு ரயில், பெங்களூரு-எா்ணாகுளம் வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவை முக்கியமானவையாகும். தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ருத் பாரத் விரைவு ரயில் இரு மாநில தலைநகா்களை இணைக்கும் குறைந்த அளவிலான கட்டண சேவையாகும். அத்துடன் சேலம்-ஈரோடு, பாலக்காடு-பொள்ளாச்சி, கொல்லம்-எா்ணாகுளம் என மெமு ரயில்களும் புதிதாக இயக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஓராண்டில் 80-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில் கால அட்டவணை சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 65 என தெற்கு ரயில்வே பகுதியில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















