EPS attacks Stalin; "ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பேரவை கூட்டத்தின்போது, ஸ்டாலின் நீட் விஷயத்தில் கூறிய பதிலின் மூலம், திமுகவின் இரட்டை வேடம் உறுதியானதாக விமர்சித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டத்தின்போது நடந்த விவகாரங்களை கூறி, ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற பொய்கள் - இபிஎஸ்
சட்டப்பேரவையில், ஆளுநருக்கு வாங்கப்பட்டு, சபாநாயகர் வாசித்த உரையில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளில், 80 சதவீதம் நிறைவேற்றப்படாதவை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தேர்தலின்போது பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை நன்றாக ஏமாற்றி விட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
நீட் விஷயத்தில் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்
சட்டப்பேரவையில் நீட் குறித்து கேட்கப்பட்டபோது, அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று ஸ்டாலின் ஒருவழியாக ஒப்புக்கொண்டார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேர்தல் பரப்புரையின்போது, ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், மக்களிடம் நீட் குறித்து பச்சை பொய் கூறி வாக்கு சேகரித்துவிட்டு, தற்போது அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம், திமுகவின் இரட்டை வேடம் தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
ஓட்டை உடைசல் பேருந்துகளே 'ஸ்டாலின் பேருந்துகள்'
திமுக அரசு மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் அறிவித்த நிலையில், மக்கள் அதற்கு ஸ்டாலின் பேருந்து என பெயர் வைத்துவிட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். இதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஓட்டை உடைசல் பேருந்துகளே ஸ்டாலின் பேருந்துகள் எனவும், திமுக ஆட்சியில், மழை பெய்தால் பேருந்துக்குள் குடை பிடிக்கும் அளவிற்கு மிக மோசமான நிலையிலேயே அவை இயக்கப்படுவதாகவும் சாடினார். மேலும், தேர்தலின்போது, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் என கூறிவிட்டு, தேர்தலுக்குப்பின், பிங்க் வண்ணம் அடிக்கப்பட்ட பேருந்துகளில் மட்டும் என மாற்றி, அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சித்தார்.

கடன் வாங்குவதில் தமிழக அரசு சாதனை - இபிஎஸ்
மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திமுக அரசு, அதை கடன் வாங்கியே வழங்குவதாகவும், அரசின் வருமானத்தை பெருக்கி அதன் மூலம் வழங்கினால்தான் பெருமைப்பட வேண்டும் எனவும் கூறினார். திமுக அரசு பொறுப்பேற்று இதுவரை 3.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் சாதனை சாதனை என கூறுவது, கடன் வாங்குவதில்தான் நடந்திருப்பதாக கடுமையாக சாடினார்.
"பொள்ளாச்சி சம்பவம் - ஆளுநர் ஒருதலைபட்ச தீர்ப்பு"
சட்டப்பேரவையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த விவகாரத்தில், அனைத்து ஆதாரங்களையும் தாம் வழங்கிவிட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக அர்த்தமில்லாத குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்தார். அவர்கள் முன்பே புகாரளித்ததற்கான எந்த ஆதாரத்தையும் திமுக சமர்ப்பிக்கவில்லை எனவும், சபாநாயகர் வேறு வழியில்லாமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படிக்கவும்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?




















