Minister Ponmudi: மீண்டும் விசாரணை வளையத்தில் அமைச்சர் பொன்முடி! ஒருமணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை அதிரடி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் விசாரணை நடத்தி வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
என்ன வழக்கு?
தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை பொன்முடி வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.
விடிய விடிய 7 மணி நேரம் விசாரணை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையை தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் அமலாக்கத் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு நவம்பர் 24ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதில் நவம்பர் 30ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் இன்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் பெறப்பட்டால், விசாரணையின் பிடி இறுகும் என்றும் சட்ட நகர்வு அமையும் எனவும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

