Summer Power Cut : கொளுத்தும் வெயில்.! தமிழகத்தில் மின் வெட்டா.? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன மின் வாரியம்
Summer Power Cut : பகல் மற்றும் இரவு நேரங்களில் சராசரியாக 21,000 முதல் 22,000 மெகாவாட் வரை தேவை உள்ளது. 12 மணி வரை இருந்த மின் தேவை, தற்போது நள்ளிரவு 1 மணி வரை நீடிப்பதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கொளுத்தும் வெயில்- அதிகரித்த மின் தேவை
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் இருந்து மக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் நாளை முதல் அக்னி வெயில் தொடங்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலால் வீடுகளில் அதிகளவு மின் தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏசியை அதிகளவு உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகளவு மின் தேவை ஏற்பட்டுள்ளதால் ஒரு சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படும் நிலை வருமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உச்சத்த தொட்ட மின் தேவை
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவிலேயே மிக அதிகமான உச்சபட்ச மின் நுகர்வு தமிழ்நாட்டில்தான் பதிவாகியுள்ளதாக கூறினார். இந்த ஆண்டு 9% மின் தேவை வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது. சராசரியாக 21,000 மெகாவாட் முதல் 23,000 மெகாவாட் வரை மின் நுகர்வு உயர்ந்துள்ளதாகவும், குறைந்தபட்சமே 18,000 மெகாவாட்டாக உள்ளதாக தெரிவித்தார்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் சராசரியாக 21,000 முதல் 22,000 மெகாவாட் வரை தேவை உள்ளது. 12 மணி வரை இருந்த மின் தேவை, தற்போது நள்ளிரவு 1 மணி வரை நீடிப்பதாகவும் குறிப்பிட்டார். இரவு நேரங்களில் மின் தேவையைப் பூர்த்தி செய்யப் பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுவதாகவும், சில நேரங்களில் உபரி மின்சாரம் விற்கப்படுவதாகவும் கூறினார்.
கை கொடுத்த சோலார்
மாநில அரசின் உற்பத்தி, மத்திய அரசு நிறுவனங்களின் மின் பகிர்வு மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் பெறப்படுவதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்ச்சி செய்யும் வகையில் 11,000 மெகாவாட் சோலார் மற்றும் 11,000 மெகாவாட் காற்றாலை மின் திறன் உள்ளதாக கூறினார். பகல் நேரத்தில் சோலார் உற்பத்தி கைகொடுப்பதாகவும், காற்றாலை சீசன் இன்னும் தொடங்காத நிலையிலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மின் விநியோகத்தில் இதுவரை சிக்கல் ஏற்படவில்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தேவையை முன்கூட்டியே கணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மின் விநியோகம் சீராக உள்ளதாக அவர் உறுதியளித்தார்.
வாக்கு எண்ணிக்கை- சீராக மின் விநியோகம்
இதனிடையே நாளை வாக்கு எண்ணிகைக நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், உதவிகள் வழங்கவும் பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் நுகர்வு தொடர்பான புகார்களை விசாரிக்க 'பீக் ஹவர்ஸ்' சமயங்களில் சிறப்புத் துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















