இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் இல்லாததால் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக மார்ட்டின் அறக்கட்டளை அறங்காவலர் லீமாரோஸ் அறிவித்துள்ளார்.

மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் லீமா ரோஸ் மார்ட்டின் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சிக்காக உழைப்பு:
2012ம் ஆண்டு தொடங்கி இன்று வரை ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். 2012ல் துணைப் பொதுச்செயலாளர் ஆகவும், 2019ம் ஆண்டு முதல் இணைப்பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறேன்.
இவ்வாறு முக்கிய பதவிகள் வகித்தபோதிலும் மேம்பாக்காக இல்லாமல் களத்தில் இறங்கி கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு இருக்கிறேன். நம் சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் வலிமையாக குரல் கொடுத்துள்ளேன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக எனது முழு உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்துள்ளேன்.
மார்ட்டின் அறக்கட்டளை அறங்காவலர்:
எனது மேற்பார்வையில் இந்திய ஜனநாயக கட்சியை கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்தி இருக்கிறேன். கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒன்றிய அளவிலும், கிளை அளவிலும் பல நூறு நிர்வாகிகளை நியமித்து கட்சியை வளர்த்திருக்கிறேன். அதேபோன்று, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஒன்றிய அளவிலும் கிளை அளவிலும் பலநூறு நிர்வாகிகளை நியமித்தது மட்டுமில்லாமல், தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துள்ளேன்.
நான் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். மேலும், மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் தாளாளராக பொறுப்பு வகிக்கும் நான் ஆண்டுதோறும் பல நூறு மருத்துவர்கள் உருவாக காரணமாக இருந்து வருகிறேன்.
இப்படி பல அலுவல் பணி மத்தியிலும் ஐஜேகே சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாக கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வகையில் தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லாத அளவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்திருக்கிறேன்.
அங்கீகாரம் இல்லை:
இது மட்டுமில்லாமல், தேர்தல் காலங்களின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஐஜேகே வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அந்த வகையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஒரே நாளில் 67 கிராமங்களுக்காக சென்று பரப்புரையில் ஈடுபட்டது எனது தனிப்பட்ட சாதனையாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீபகாலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். பொதுவாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணின் உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை வழங்காதது பெரும் ஏமாற்றமே.
ஐஜேக-வில் இருந்து விலகல்:
கட்சியின் தொண்டர்களான நமது சமூக சொந்தங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்த 8 மாத காலம் காத்திருந்தேன். கட்சித் தலைமையில் இருந்து எந்தவொரு முறையான பதில் வராத காரணத்தினாலும், சில சமீபகாலமாக கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை கனத்த இதயத்தோடு உங்களுக்கும் அறிவிக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் என கட்சிப் பணிக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், நமது சமூக சொந்தங்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினாலும் எனது அரசியல் பயணமும், மக்கள் சேவையும் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்























