"விளம்பர வெறி.. அருவருப்பு.. ஏற்கவே முடியாது.." அமைச்சர் கீர்த்தனாவிற்கு உதயநிதி கண்டனம்
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு நடைபெற்று வருகிறது. தவெக அரசின் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் கீர்த்தனா. தவெக அரசின் மிக இள வயது அமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.
கீர்த்தனாவிற்கு குவியும் கண்டனம்:
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது மாணவ - மாணவிகளின் ஆங்கிலத் திறமையை வளர்க்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி அவர் பேசிய கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் கீர்த்தனாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அருவருப்பான செயல்:
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. இது மிகவும் உணர்வற்ற செயல்.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் வகுப்பு எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
— Udhay (@Udhaystalin) July 6, 2026
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க…
விளம்பர வெறி:
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனாவிற்கு உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் கீர்த்தனா இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















