Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!
விஜய் அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். மீதமுள்ள தலா ஒவ்வொரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த இருவர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.
கூட்டணி ஆட்சிக்கு வித்திட்ட விஜய்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தன்னுடைய அரசியல் கட்சியின் தொடக்கத்திலேயே ஆட்சியில் பங்கு என்பதை விஜய் அறிவித்தார். ஆனால் அதெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என மற்ற கட்சிகள் கண்டும் காணாமல் இருந்தது. ஆனால் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்த முதலமைச்சர் விஜய் அதனை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.
3 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்
இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்களில் வென்றாக வேண்டும் என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 107 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கேட்டார். இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்றுக்கொண்டது. அதன்படி அக்கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டது. ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் சுற்றுலாத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.
தற்போது விஜய் அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். அதிகப்பட்சம் 35 பேர் இருக்கலாம் என்ற நிலையில் மீதமுள்ள தலா ஒவ்வொரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்த நிகழ்வு மாபெரும் வரலாற்று புரட்சியாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறாத கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த முதலமைச்சர் விஜயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருமாவளவன் மீது கடும் விமர்சனம்
இந்த நிலையில் திருமாவளவன் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம்பெறுவது மூலம் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை வெளியேறியுள்ளது. இதனால் விசிக தலைவர் திருமாவளவனை திமுகவினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
அதன்படி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















