கடலூர் - விழுப்புரம் பயணம் இனி ‘சூப்பர் ஸ்பீட்’! அசர வைக்கும் ரூ.50 கோடி மெகா திட்டம்!
கடலூர் ஆல்பேட்டையில் இருந்து கண்டரக்கோட்டை மேம்பாலம் வரை செல்லும் பழைய கஸ்டம்ஸ் சாலையை ரூ.50 கோடி செலவில் இருவழிச் சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடலூர் : கடலூர் ஆல்பேட்டையில் இருந்து கண்டரக்கோட்டை மேம்பாலம் வரை செல்லும் பழைய கஸ்டம்ஸ் சாலையை ரூ.50 கோடி செலவில் இருவழிச் சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பயண நேரம் அதிகம்
கடலூரில் இருந்து மாளிகைமேடு வழியாக விழுப்புரம் செல்லும் வழித்தடத்தில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த வழித்தடம் 50 கிலோமீட்டர் தூரம் கொண்டது என்பதால், கடலூரில் இருந்து விழுப்புரம் செல்ல சுமார் 1½ மணி நேரம் ஆகிறது. மேலும் நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் ஆகிய நகரங்கள் வழியாக செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயண நேரம் இன்னும் கூடுதலாகிறது.
10 கி.மீ. தூரம் குறையும்
இதனால் நேரத்தை மிச்சப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் 10 கிலோமீட்டர் தூரம் குறைவான பழைய கஸ்டம்ஸ் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடலூர் ஆல்பேட்டை பெண்ணையாற்று கரையில் தொடங்கி, பண்ருட்டி வி.கே.டி. சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் வரை ஊராட்சி நிதியில் முதற்கட்டமாக மண்சாலை அமைக்கப்பட்டது.
தார் சாலை
அதன் தொடர்ச்சியாக, குண்டுசாலையில் இருந்து சொர்ணாவூர் பாலம் வரை ரூ.16 கோடி செலவில் தார் சாலை போடப்பட்டது. சொர்ணாவூரில் இருந்து கண்டரக்கோட்டை வரை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்ததால், தற்காலிகமாக கஸ்டம்ஸ் சாலை சொர்ணாவூர் பாலத்தோடு இணைக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த வெள்ளப்பெருக்கின் போது நத்தப்பட்டு பகுதியில் இருந்த கல்வெட்டு பாலம் இடிந்து உள்வாங்கியது. இதனால் அந்த வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரூ.50 கோடியில் சீரமைப்பு
இதைத் தொடர்ந்து, இந்தச் சாலையை முழுமையாக இருவழிச் சாலையாக சீரமைக்க அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் முதற்கட்டமாக, குண்டுசாலையில் இருந்து புறவழிச்சாலை வரை தரமான சிமெண்ட் சாலையும், அதனைத் தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் வரை அகலமான இருவழிச் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பெண்ணையாற்றின் தெற்கு கரையைப் பலப்படுத்தும் சீரமைப்புப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், கடலூர் - விழுப்புரம் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் கணிசமாகக் குறைவதுடன், போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















