ஜோசப் விஜய்.. மதத்தை பார்த்து ஓட்டு போடுவீங்களா? - மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயித்தார். இதனைத் தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

மக்கள் மதத்தை பார்த்து விஜய்க்கு ஓட்டு போட்டதாக திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயித்தார். இதனைத் தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதேசமயம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி தவெகவினர், காங்கிரஸ் கட்சியினர் என அனைவரையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். இதனை திமுக தலைமை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜோசப் என சொன்னதும் ஓட்டு போட்டீங்களா?
அந்த வகையில் நேற்றும் தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் பேசிய அவர், “என்னுடைய பெயர் அனிதா ராதாகிருஷ்ணன்னு தான் ஆவணங்களில் இருக்கிறது. நான் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் கிடையாது. மக்களாகிய உங்களை மதம், சாதியைப் பார்த்து நாங்கள் எல்லா உதவியையும் செய்யவில்லை. ஆனால் நீங்கள் மதத்தைப் பார்த்து விட்டீர்கள். இது விளங்குமா? .. எங்க தலைவர் மு.க.ஸ்டாலினை பகைக்கலாமா நீங்கள்?.. ஜோசப் என சொன்னதும் ஓட்டு போட்டு விட்டீர்களா?.. இன்னும் 4 அல்லது 6 மாதம் தான் டைம். விஜய்க்கு அவ்வளவு தான் நேரம். நம்ம தயவுல தான் ஆட்சி நடக்குது. அதிமுக ஆதரவு கொடுத்தால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை வெளியேறி விடும்.
தேர்தல் வாக்குறுதி கொடுத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார். கிறிஸ்தவ மக்கள் ஓட்டு வேண்டும் என்றால் ஜோசப் விஜய் என சொல்வார், இந்து மக்கள் ஓட்டு வேண்டும் என்றால் விஜய் என போட்டுக் கொள்வார். அதேபோல் காங்கிரஸ் கட்சி நம்ம தயவில் 5 இடங்களில் ஜெயித்தார்கள். ஆனால் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விட்டார்கள். அக்கட்சியை மொத்தமாக காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் மதம் பார்த்து வாக்களித்தார்களா?
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சசிகாந்த் செந்தில், “அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே தாங்கள் சார்ந்த ஒரு கட்சியின் தோல்வி என்பது வருத்தம் அளிக்கக்கூடியது தான், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக மக்களை மதம் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்று மக்களின் மீது குற்றம் சுமத்துவது எப்படி நியாயமாகும். மக்கள் மதம் பார்த்து வாக்களித்தார்கள் என்ற கருத்தை நீங்கள் முன்வைப்பது எவ்வளவு பெரிய தவறு. இத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்த உங்களுக்கு மக்கள் எதை கண்டு வாக்களித்தார்கள்? கூட்டணி கட்சிகளின் ஆதரவுகளை உருவினால் ஆட்சி வீழ்ந்து விடும் என்ற கருத்தையும் கூறுகிறீர்கள்.
கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவு என்பது மதவாத சக்திகள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு. அந்த வகையில் அம்முடிவு அக்கட்சிகளின் கொள்கை முடிவு. தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அக்கட்சிகளை நீங்கள் நினைக்கும்படி ஆட்டிவைக்க முடியும் என்பது போன்று நீங்கள் கூறும் கருத்துக்கள் ஏற்க கூடியதல்ல. காங்கிரஸை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள். தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி மாபெரும் வரலாறு கொண்ட பேரியக்கம் காங்கிரஸ். அது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது மாபெரும் மக்கள் இயக்கம். அதை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















