CM Vijay: பெரம்பூர் தொகுதி குறைகளை தீர்க்க திணறுகிறாரா முதல்வர் விஜய்... அப்படி என்ன பிரச்னை?
தனது பெரம்பூர் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்க தொடங்கப்பட்ட வெப்சைட்டில் ஜூலை 21ம் தேதி நிலவரப்படி காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 821 புகார்கள் பெறப்பட்டு அதில் 405 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தனது பெரம்பூர் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேக இணையதளம் தொடங்கிய நிலையில் அதில் தெரிவிக்கப்பட்ட குறைகள் விரைந்து சரி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய் இந்த தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விதிகளின்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனிடையே சென்னை பெரம்பூரில் வெற்றி பெற்ற பிறகு விஜய் அங்கு செல்லாமல் இருந்தார். அதேசமயம் அவருக்கான எம்.எல்.ஏ. அலுவலகம் பிரத்யேக வசதிகளுடன் தயாராகி வந்தது.
எம்.எல்.ஏ., அலுவலகம் - குறைகளை சொல்ல வெப்சைட்
இந்த நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு சென்று தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார். அத்துடன் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேகமாக https://tvkcm.com/ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் மக்களின் குறைகள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்த வெப்சைட் மூலம் பொதுமக்கள் தங்கள் தொகுதி தேவைகள், குறைகள் ஆகியவை டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மூலமாக பேசியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 94985 00444 என்ற தொலைபேசி எண்ணும், cmvijayperambur@gmail.com என்ற மெயில் ஐடியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் புகார்கள் மீது தீர்வு
இதற்கிடையில் வெப்சைட் தொடங்கிய நாள் முதல் புகார்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை குறிக்கும் வகையில் தீர்வு கண்ட புகார்கள் பகுதியில் 0 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பெருமளவில் பேசுபொருளாக மாறியது. ஆனால் சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சரியான டேட்டா காட்டவில்லை என எம்.எல்.ஏ. அலுவலகம் தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த வெப்சைட்டில் முழு விவரமும் வெளியானது.
அதன்படி ஜூலை 21ம் தேதி நிலவரப்படி காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 821 புகார்கள் பெறப்பட்டு அதில் 405 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது. குறைகளை தீர்க்க சராசரியாக 6 நாட்கள் வரை எடுக்கப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 32 சதவிகித குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மின் தடை, சாலை வசதி, சுகாதாரம், சாலை பாதுகாப்பு, தெரு விளக்கு பிரச்னை, குப்பைகளை பெறுதல், மழைநீர் வடிகால், கல்வி வசதி, கொசு தொல்லை, தீ தடுப்பு வசதி என பல வகைகளில் புகார்கள் பெறப்பட்டது. 7 வார்டுகளை உள்ளடக்கிய பெரம்பூரில் அதிகப்பட்சமாக 34வது வார்டில் 350 குறைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு, கல்வி வசதி போன்றவற்றில் மிக குறைவான அளவில் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் பிற தொகுதி மக்களும் புகார்களை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் பெரம்பூர் தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தங்களுக்கு வசதி வாய்ப்பை விட சுகாதாரம், மழைநீர் வடிகால் போன்றவை தான் தற்போது அவசியம் என பெரம்பூர் மக்களும் தெரிவிக்கின்றனர். விரைவில் 100 சதவிகிதம் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















