குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்த நிலையில், அங்கு மாணவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
சைதாப்பேட்டை சமூக நீதி விடுதி
சென்னை, சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி கடந்த திமுக ஆட்சியில் 10 தளங்களுடன் ரூ. 44.5 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த விடுதியில் சென்னையில் பல கல்லூரிகளில் பயிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விடுதியை திறந்து வைத்தார்.
முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
இதனிடையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், நேற்று திடீரென இந்த விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதாவது குடீநீர் பிரசினை, தரமற்ற உணவு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மரியாதையின்றி பேசுவது, விடுதிக்கான விளையாட்டு மைதானம் பூட்டப்பட்டு கிடப்படது, பகுதி நேர பணி செய்பவர்கள் இரவில் வெளியில் கொசுக்கடியில் தூங்க விடுவது, பணியாளர் பற்றாக்குறை என பல வகையான புகார்கள் முன்வைக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் இந்த ஆய்வை எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொண்டார். கழிவறை முதற்கொண்டு அவரே நேரடியாக ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் உடனிருந்தனர். கைகளைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் சொன்ன அனைத்து குறைகளையும் பொறுமையுடன் கேட்டு விஜய் குறித்துக் கொண்டார். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு தருவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார் இருவரும் அந்த விடுதியின் இரவு உணவினை உண்டு ஆய்வு செய்தனர்.
ஒரே நாளில் பிரச்னைகளுக்கு தீர்வு
முதலமசிசர் விஜயிடம் எம்.சி.ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் சமூகநீதி துறை மூலம் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி தரமான உணவு வழங்க விடுதி உணவுப் பட்டியல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்டநாளாக மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பகுதி நேர பணி செய்யும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தரமான உணவு வழங்கலை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















