CM Vijay: ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் விஜய் அதிரடி.. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்?
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமானது. இதனால் சிறிய வயதினர் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக விஜய் உறுதியளித்திருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதற்கட்டமாக 500 கடைகளை மூட முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அக்கட்சி சார்பில் முதற்கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழித்தல் ஆகியவற்றிற்கு முதற்கட்டமாக விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் பாதுகாப்பு படை, போதைப்பொருட்கள் தடுப்புக்காக மாவட்டந்தோறும் குழுக்கள் ஆகியவை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமானதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிறிய வயதினர் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபட்டதும் நிகழ்ந்தது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் புதிய முதலமைச்சர் இந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காண்பார் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை முதலமைச்சர் விஜய் மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாய் அள்ளித்தரும் மூலங்களில் ஒன்றாக டாஸ்மாக் உள்ளது. இப்படியாக தமிழ்நாடு முழுவதும் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் மாதம் ரூ.4 கோடி வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ.48,344 கோடி கிடைத்தது.
அதேசமயம் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதனால் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து - ரயில் நிலையங்கள் ஆகியவை அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இவை விரைவில் மூடப்படும் எனவும் சொல்லப்படுகிறது. பேருந்து நிலையங்களில் மது அருந்துவிட்டு பெண் பயணிகளுக்கு பலர் தொந்தரவு அளித்து வரும் நிலையில் பெண்கள் அச்சமின்றி வெளியில் சென்று வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் திறப்பு நேரம் காலை 10 மணியில் 12 மணியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. 2021 திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. ஆனால் சட்டவிரோத மது விற்பனை தொடங்கி கஞ்சா, குட்கா பிற போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















