முதல்வர் வருகையை முன்னிட்டு 14ம் தேதி போக்குவரத்து மாற்றம் - வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும்? - முழு விவரம் இதோ
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்.

திருப்பத்தூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கும் திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதிக்கு வருகை தர உள்ளார். இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வாகனங்கள், திருப்பத்தூர் சாலையை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக உள்ள இணைப்பு சாலை வழித்தடங்களில் செல்ல வேண்டும். திருப்பத்தூர் நகரில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையை தவிர்த்து வெங்களாபுரம் கூட்ரோடு மாடப்பள்ளி, ஆலங்காயம் மார்க்கமாக செல்ல வேண்டும்.
மேலும், திருப்பத்தூர் நகரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் புதுப்பேட்டை கூட்டுரோடு, ஜெயபுரம் சந்திப்பு சாலை, புள்ளானேரி வழியாக செல்ல வேண்டும். தருமபுரி, பெங்களூரு, கிஷ்ணகிரி மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள் கிருஷ்ணா சில்க்ஸ் அருகில் இருந்து புறப்பட வேண்டும்.
அதேபோல் திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் சென்னை செல்லும் பேருந்துகள் திருப்பத்தூர் பஸ் டிப்போ அருகில் இருந்து புறப்பட வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் 14ம் தேதி ஒருநாள் முழுமையாக அமல்படுத்தப்படும். மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்ரோன்கள் பறக்க தடை
மேலும், அன்றைய தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.























