செம்பரம்பாக்கம் ஏரி: வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! நீர்மட்டம் உயர்வு, பாதுகாப்பாக இருங்கள்!
Chembarambakkam Lake: "சென்னையின் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது"

"சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது"
செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
வானிலை மைய முன்னரிவிப்பின்படி வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 17:11.2025 காலை 8.00 மணி அளவிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 30.11.2025 அன்று முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இன்றைய (03.12.2025) நிலவரப்படி நீர் இருப்பு 21.96 அடியாகவும், கொள்ளளவு 3110 மில்லியன் கனஅடியாகவும் (85.32 %) உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 06.00 மணி நிலவரப்படி 1380 கனஅடியாக உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழையினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகபடியாக உள்ளதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு
எனவே ஏரியின் நீர் மட்டம் 22 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி (Compendium of Rules) அணைக்கு வரும் நீர்வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். 03:122025-ன்படி 2200 அடியை நெருங்குவதாலும் ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 1380 கன அடியாக உள்ளதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து பகுதியில் அமைந்துள்ள சிறு பாசன ஏரிகள் 95% சதவீதம் நிரம்பி உள்ளதாலும், மேலும் வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருப்பதாலும் இன்று 03:12.2025 காலை 08.00 மணி அளவில் வினாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது . மேலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகும் நிலையில், உபரி நீர் வெளியேற்றம் கூடுதலாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.





















