ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
நயினார் நாகேந்திரனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள கட்சியின் நிர்வாகிகள் அதை நிறைவேற்ற வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. நாட்டையே ஆளும் பெருமை கொண்ட பாஜக, தமிழ்நாட்டில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறறது. இது தேசிய தலைமைக்கு மிகப்பெரிய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
நயினார் நாகேந்திரன் மீது விமர்சனம்:
இந்த சூழலில், தமிழ்நாட்டில் பாஜக-வின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்த அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் இணைந்து வருகின்றனர்.
இந்த சூழலில், கமலாலயத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் ஒரு நயினார் நாகேந்திரனின் தலைமை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டிற்கு மற்ற மாவட்டத் தலைவர்களும் அமைதி காத்த நிலையில், நயினார் நாகேந்திரன் சற்று ஆடிப்போகியுள்ளார்.
ஆகஸ்ட் 15 வரை கெடு:
கட்சியில் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் 50 சதவீதம் இளைஞர்களை நியமிப்பது, 67 மாவட்டங்களை 117 ஆக உயர்த்துவது என அடுத்தடுத்து பல்வேறு கோரிக்கைகளை பலரும் முன்வைத்துள்ளனர். தேர்தல் தோல்வியாலும், அண்ணாமலை கட்சி தொடங்க உள்ளதால் அவரது பக்கம் தாவ பலரும் தயாராக இருப்பதாலும் இவர்களைத் தக்கவைப்பதற்காக இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து டெல்லி தலைமையிடம் பேசுவதாக நயினார் நாகேந்திரன் உத்தரவாதம் அளித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து கூட்டத்தில் கோரிக்கை விடுத்த நிர்வாகிகள் அனைவரும் நயினார் நாகேந்திரனுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலக்கெடு விடுப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகளை வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சியில் இணைந்து விடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
சரிந்த வாக்கு வங்கி:
தமிழ்நாட்டில் பாஜக-வின் எதிர்ப்பு மனநிலை அதிகளவில் உள்ள நிலையில், தவெக-வின் வருகையால் அவர்களின் வாக்கு வங்கி பெரியளவு பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், அண்ணாமலையும் தனிக்கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கி சரியும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனால், தற்போதைய நிர்வாகிகளை எப்படியேனும் உள்ளாட்சித் தேர்தல் வரை தக்க வைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இனி வரும் நாட்களில் பாஜக-வில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















