Pongal Special Buses: பொங்கல் பண்டிகை; முதல் நாளே 1.34 லட்சம் பேர் வெளியூர் பயணம்... அலைமோதிய கூட்டம்..!
பொங்கல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று 1.34 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள்:
சிறப்பு பஸ்கள் உள்பட 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து புறப்படும் வெளியூர் பஸ்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டியை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக நேற்று முதல் வருகின்ற 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
17 ஆயிரம் பேருந்துகள்:
அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஊருக்கு திரும்பும் வகையில் வருகிற 18ம் தேதி மற்றும் 19 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களிலிருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றனர். இதையடுத்து, நேற்று முதல் வருகிற 14ம் தேதி வரை மொத்தமாக 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
6 முக்கிய இடங்கள்:
வெளியூர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட 6 இடங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்- பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் எண்கள்:
தமிழ்நாடு முழுவதும் இதுவரை சிறப்பு பேருந்துகளில் செல்வதற்காக மட்டும் 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஏதேனும் புகார்கள் இருந்தால் 9445014450, 9445014436 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















