அன்பு கட்டளை... தலைவரான முதல் நாளே நயினார் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு போட்ட அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற முதல் நாளே, செருப்பு அணியும்படி அண்ணாமலைக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் செருப்பு அணிந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை முன்வைத்து செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை சபதம் ஏற்றிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற முதல் நாளே அந்த சபத்தை திரும்பப் பெறுமாறு அண்ணாமலையிடம் வலியுறுத்தியுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் செருப்பு அணிந்துள்ளார்.
சபதம் எடுத்த அண்ணாமலை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே மாணவி ஒருவரை, ஞானசேகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்.
இந்த விவகாரத்தை முன்வைத்து அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்தார். அதோடு நிற்காமல், கவனம் ஈர்க்கும் வகையில் தன்னை தானே சாட்டையிலும் அடித்து கொண்டார். கடந்த 4 மாதங்களாக அவர் செருப்பு அணியாமல் இருந்து வந்தார்.
தலைவரான நயினாரின் அன்பு கட்டளை:
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற உடனே, செருப்பு அணியும்படி அண்ணாமலைக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் செருப்பு அணிந்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலையை மாற்றி அந்த பதவிக்கு நயினார் நாகேந்திரனை கொண்டு வந்துள்ளது பாஜக மேலிடம். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுகவுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவரை கொண்டு வந்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மேலிடம் விரும்பியது. அந்த வகையில், பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில்தான், மத்திய சுரங்கத்துறை அமைச்சரும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல். முருகன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




















