"விவசாயிகளுக்காக நானே களத்தில் இறங்கி போராடுவேன்” - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள ராஜ வாய்க்காலிலிருந்து விவசாயிகளுக்கு முறையாக நீர் ஆதாரம் செல்லவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள ராஜ வாய்க்காலிலிருந்து விவசாயிகளுக்கு முறையாக நீர் ஆதாரம் செல்லவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, குடகனாற்றை மீட்டெடுக்க, பாசன விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணை அருகே உள்ள ராஜ வாய்க்கால் பகுதியை பார்வையிட்டார்.
தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடையே பேசிய அன்புமணி ராமதாஸ், "திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்குச் செல்லக்கூடிய ராஜ வாய்க்காலில் முறைகேடாகத் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்தத் தொகுதி அமைச்சர் தனது சொந்த நிலம் பயன்பாட்டிற்காகவும், தனது செண்ட் ஃபேக்டரிக்கும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
அவர்களுக்கு ஏற்கனவே வைகை அணை நீர் செல்கிறது. விவசாயிகளுக்கு முறையாக நீர் ஆதாரம் செல்லவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன். 5, 6 மாதங்கள் கழித்து திமுக கட்சி வரப்போவதில்லை. நமது ஆட்சிதான். இதற்குத் தீர்வு காணப்படும். திண்டுக்கல் மாவட்டம், கரூர் மாவட்டத்தில் 12000 ஏக்கர் நிலங்கள் இந்த நீரில் பாசனம் செய்து, பின்னர் அமராவதி ஆற்றில் இந்த குடகனாறு அணை கலக்கிறது. இந்த ராஜ வாய்க்காலில் அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் குடிநீருக்காகக் கஷ்டப்படுகின்றனர்.
ஆத்தூர் காமராஜர் அணையைத் தூர்வார வேண்டும். 25 அடி ஆழமாக உள்ள அணை தற்போது 10 அடியாக உள்ளது. இது ஒரு சாதாரணப் பிரச்சினை. இந்தப் பகுதி அமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன். இல்லையென்றால் நானே நேரடியாக வந்து போராட்டம் நடத்துவேன். இந்த பிரச்சனை குறித்து வல்லுநர் குழு அமைத்து இதுவரை தீர்வு காணப்படவில்லை. ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் அறிக்கை வெளியிடப்படவில்லை." என்றார்.






















