![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
தமிழ்நாடு முழுவதும் 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் - மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து, ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை ரத்து, மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.
![தமிழ்நாடு முழுவதும் 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் - மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு All over Tamilnadu lorry strike on 9th - State Lorry Owners Association Announcement. தமிழ்நாடு முழுவதும் 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் - மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/82761c9f6223500b0c7dc987d1a2a6011699264978895113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்ட கொண்டலாம்பட்டியில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், மாநில லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் வாகன பழுதுபார்ப்போர் சங்கம் என பல்வேறு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தனராஜ், ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு வரி உயர்வை 40 சதவீதம் அளவில் அரசு உயர்த்தி உள்ளது. எனவே காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தப்படி இம்மாதம் 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என்று கூறினார்.
"இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பாதிப்பு ஏற்படும். மேலும் 200 கோடி ரூபாய் அளவில் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அரசு அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றார். ஒன்பதாம் தேதி போராட்டத்தின் போது, வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அப்படியே அந்தந்த மாநில எல்லையிலேயே நிறுத்தப்படும். கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய லாரிகள் அத்திப்பள்ளியிலும், புதுவையில் இருந்து வரக்கூடிய லாரிகள் புதுச்சேரி எல்லையிலும், ஆந்தரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். தமிழகத்தை போன்று பிற மாநிலங்களிலும் ஆன்லைன் மூலமாக வழக்கு போடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான ஆன்லைன் வழக்குகள் போடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்" என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)