Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
டெல்லியில் நடந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இந்தியாவின் பழமையான கட்சி காங்கிரஸ். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியிலும், எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அவர்களின் அரசியல் தாக்கம் என்பது மிக மிக குறைவே ஆகும்.
ராகுல்காந்தி நடத்திய சந்திப்பு:
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மிகவும் முக்கியமான தேசிய கட்சியாக இருந்தாலும், திமுக-வின் தயவாலே காங்கிரஸ் தமிழ்நாட்டில் வெற்றி பெறுகிறது என்றொரு விமர்சனமும் பலரால் முன்வைக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என்று பல அழுத்தங்களை காங்கிரஸ் அளித்து வருவதாக தொடர்ந்து தகவல் வருகிறது.
இந்த சூழலில், டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் தமிழக காங்கிரசுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றுள்ளனர்.
வறுத்தெடுத்த ராகுல்:
இந்த கூட்டத்தில் இவர்களிடம் ராகுல்காந்தி சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தென்னிந்திய மாநிலமான கர்நாடக, கேரளா, பாண்டிச்சேரி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வளர்ந்திருப்பது போல தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை? காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக எம்பி-க்களும், எம்.எல்.ஏ.க்களும் என்ன செய்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியின் கேள்விக்கு தமிழக காங்கிரசார் பதில் அளித்தாலும் ராகுல் காந்தி அதில் திருப்தி அடையவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் பெண் எம்பி ஒருவரிடம் ராகுல் காந்தி அவரது தொகுதியின் பூத் ஏஜெண்ட்கள், பூத் கமிட்டி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவும் ராகுல்காந்தி அதிருப்தி அடைந்துள்ளார்.
வீழ்ச்சிப் பாதை:
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கோலோச்சி வந்தது. தமிழ்நாட்டில் கடைசியாக முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம். 1967ம் ஆண்டுக்கு பிறகு அவர்களிடம் இருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்பு, திமுக - அதிமுக மாறி, மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது காங்கிரசின் வளர்ச்சி மிக மிக குறைவு ஆகும். தமிழக காங்கிரஸ் உட்கட்சி மோதல் காரணமாகவே பல ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. கட்சியின் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை உட்கட்சி பூசல் தமிழக காங்கிரசில் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.






















