Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
எடப்பாடி பழனிசாமி ஒரு தீர்க்கத்தரிசி. அதனால் தான் 2025ம் ஆண்டு உங்களுக்கு மாநிலங்களவை எம்.பி., சீட் கொடுக்க முடியாது என கூறியதாக தேமுதிகவை விந்தியா விமர்சித்துள்ளார்.

தேர்தல் சீசன் வந்து விட்டால் துண்டு போட்டு பேரம் பேசும் ஒரே அரசியல்வாதி பிரேமலதா மட்டும் தான் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா விமர்சித்துள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை அதிமுக கூட்டணியில் தொடர்ந்த தேமுதிக, இந்த முறை திமுக கூட்டணிக்கு சென்றுள்ளது. இதனை அதிமுகவின் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா, “பிரேமலதா திமுகவுக்கு போய் விட்டார்களே.. அதனால் உங்களால் பாதிப்பா?” என கேட்டார்கள். அதற்கு நான், “அவங்க போனா நாங்க வருத்தப்பட, பாதிக்கப்பட என்றைக்கு அவர்களை நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என சொன்னோம்’ என கூறினேன். திருவிழா சீசன் வந்து விட்டால் சிலர் ஊர் ஊராக போய் கடை வைப்பார்கள். அதேபோல் பிரேமலதா தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும். கட்சியை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக சென்று பேரம் பேசுவிடுவார். துண்டு போட்டு பேரம் பேசும் ஒரே அரசியல்வாதி பிரேமலதா மட்டும் தான்.
எடப்பாடி பழனிசாமி ஒரு தீர்க்கத்தரிசி. அதனால் தான் 2025ம் ஆண்டு உங்களுக்கு மாநிலங்களவை எம்.பி., சீட் கொடுக்க முடியாது என கூறினார். ஒருவேளை தேமுதிகவுக்கு சீட் கொடுத்திருந்தா அதையும் வாங்கிட்டு போய் கூட்டணி வச்சிருந்துருப்பாங்க. அண்ணாமலை படத்தில் ரஜினி ஏலத்தில் ராதாரவியை மாட்டி விடுவது போல காட்சி இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். அரை சதவிகிதம் கூட ஓட்டு இல்லாத ஒரு கட்சியை சேர்த்து கொண்டிருக்கிறார். திமுக அதிக சீட் கொடுப்பதால் அங்கு சேர்ந்துக் கொண்டு நம்மை திட்டுவார்கள். திட்டுவதற்கு என ஒரு கட்சியை பிரேமலதா நடத்தி கொண்டிருக்கிறார். அவர்களுக்கு பெரிய கொள்கை எல்லாம் கிடையாது. தேமுதிகவுக்கு எதுக்கு எவ்வளவு மதிப்பு என்பது தெரியாது. நல்லவேளை இதையெல்லாம் காணாமல் விஜயகாந்த் சீக்கிரமே மறைந்து விட்டார் என விந்தியா விளாசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், துரோகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று எத்தனையோ பேர் எடப்பாடி பழனிசாமியிடம் வந்து கேட்டார்கள். துரோகின்னு தெரிந்த பிறகு எப்படி மன்னிக்க முடியும் சொல்லுங்கள். திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு அதிமுக அலுவலகத்தை ரவுடிகளை வைத்துக் கொண்டு சேதப்படுத்தினார்கள். கட்சியை உடைக்கவும், இரட்டை இலையை முடக்க பார்த்தார்கள். நீதிமன்றம் போய் வழக்கு மேல வழக்கு போட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அசரவே இல்லை. சண்டையில் தோற்றவுடன் சமாதான நாடகம் போட்டார்கள். அதெல்லாம் நடிப்பு என்பது இபிஎஸ்க்கு தெரியும்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியணும் என அவர் பொறுமையா காத்திருந்தார். இன்றைக்கு ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுக கைகூலிகள் என்பது மக்களுக்கு புரிந்திருக்கும். இவர்களை மன்னித்து சேர்த்திருந்தால் அதிமுக கரை வேட்டிக் கட்டிக்கொண்டு திமுகவுக்கு வேலை பார்த்திருப்பார்கள் என விந்தியா தெரிவித்துள்ளார்.























