’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? - எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தி உள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுதி ஒருவர், இரண்டு கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுக்குக் காரணமான கார்த்தி, மோகன் ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விமர்சிக்கும் அதிமுக
இந்த நிலையில் அதிமுக இதுகுறித்து விமர்சித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கை
தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதலமைச்சர் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று வேலுமணி பதிவிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















