இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
அதிமுக-வில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ற மிகப்பெரிய கேள்வியும், சவாலும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் ஒவ்வொரு கட்சியினருக்கும் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறையினரின் வாக்குகள் எந்தளவு முக்கியம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. அதேசமயம் சமூக வலைதளங்களின் பங்குகளும் எந்தளவு எதிரொலித்துள்ளது என்பதற்கு தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம்.
இளைஞர்கள் பங்களிப்பு:
இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம் என்பதை ஆட்சியைப் பிடித்துள்ள தவெக மற்ற கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியான திமுக-வும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. அதற்கான வெளிப்பாடே தற்போது நடந்து வரும் ஜென்இசட் திமுக கூட்டங்கள் ஆகும்.
அதிமுக-விற்கு பின்னடைவு:
ஆனால், மற்றொரு பிரதான திராவிட கட்சியான அதிமுக-வில் இளைஞர்கள் கட்சியில் சேர்வது என்பது அரிதினும் அரிது என்ற மோசமான சூழலுக்குச் சென்றுள்ளது. கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் திமுக-விற்கும், ஆளுங்கட்சியான தவெக-விற்கும் தாவியுள்ள நிலையில், இருக்கும் நிர்வாகிகளை தக்க வைப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
அதிமுக-வில் 35 வயதுக்கும் குறைவான இளைஞர்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைந்த அளவிலே தற்போது உள்ளது. தவெக மற்றும் திமுக-வுடன் ஒப்பிடும்போது இது மிக மிக குறைந்த அளவிலான எண்ணிக்கை என்றே கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களின் சேர்க்கை என்பது மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.
என்ன செய்வார் எடப்பாடி பழனிசாமி?
ஆனால், அதிமுக-வில் இளைஞர்களின் சேர்க்கையும் பெரியளவில் நடைபெறாத நிலையில், இளைஞர்களின் எண்ணிக்கையும் இல்லாத நிலையில் இது அடுத்தடுத்த தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை அதிமுக-விற்கு ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரையும் தக்கவைப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்கனவே 6 எம்எல்ஏ-க்களை அவர் பறிகொடுத்துள்ள நிலையில், எஞ்சிய எம்எல்ஏ-க்களை பறிகொடுக்காமல் இருப்பதிலே அவர் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இருப்பினும் அடுத்தடுத்து இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இளம் ரத்தத்தை பாய்ச்சுவதற்கு என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. இளைஞர்களின் சேர்க்கைக்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தாவிட்டால் அது அதிமுக-வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















