நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: விசைப்படகுகள் நிறுத்தம்
நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மட்டும் 700 படகுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மொத்தம் 2000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன் பிடிக்கும் தொழிலை மீனவர்கள் நிறுத்தி வைப்பர்.
61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன் பிடி தடைகாலம் நாளை ஆரம்பிக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணிமுதல் தொடங்குகிறது.
இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றே மீன் பிடிக்க செல்லவில்லை. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு பயந்தும் மீன் பிடிக்க செல்லவில்லை என தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இவை இன்னும் 2 மாத காலத்திற்கு எடுக்கப்படாது.
இதேபோல், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன.
மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்கள் மராமத்து பணியில் ஈடுபடுவார்கள். அதுமட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

