மேல் அதிகாரிக்கு எதிராக சதி.. கூட இருந்தே குழி பறித்த ஊழியர்கள்.. தீயணைப்புத்துறையில் இப்படி ஒரு சம்பவமா?
திருநெல்வேலி மண்டலத்தில் தீயணைப்புத் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சரவணபாபு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி தீயணைப்புத்துறையில் மேல் அதிகாரியை சிக்க வைக்க சக ஊழியர்கள் கூட்டு சேர்ந்து சதி செய்து அவரை லஞ்ச ஒழிப்புத்துறையில் மாட்ட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மண்டலத்தில் தீயணைப்புத் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சரவணபாபு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே உள்ள அலமாரியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலான பணம் ஆறு கவரில் கைப்பற்றப்பட்டது,
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கில் காட்டாத பணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகத்திற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் சோதனை நடந்த தினத்திற்கு முந்தைய நாள் துணை இயக்குனர் சரவணன் அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் இருந்த கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு முகமூடி மற்றூம் கைகளில் கிளவுஸ் அணிந்து வந்த இரு நபர்கள் கவர்களில் பணத்தைக் கொண்டு வந்து அலுவலகத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது. இதனை தொடர்ந்து துணை இயக்குனர் சரவணபாபு நெல்லை மாநகர காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் இந்த புகாரில் விசாரித்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது சரவணபாபு சிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் ஆனந்த் மற்றும் அவரது சகோதரி மகன் முத்து சுடலை ஆகிய இருவரை நவம்பர் 25ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திட்டத்தின் பின்னணியில் தீயணைப்பு உயர் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின் படி, “கடந்த 2021 ஆம் ஆண்டு சரவண பாபு நாகர்கோயிலில் தீயணைப்பு துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது இரண்டு பெரிய நிறுவனங்கள் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழை போலியாக வைத்திருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் போலியான தீயணைப்பு தடையில்லா சான்றிதழ்கள் வழங்கியதாக சென்னையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் சரவண பாபு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டு அந்தத் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு சரவண பாபுவை பழிவாங்க திட்டமிட்டனர். இந்த குழுவில் தீயணைப்புத் துறையின் தற்போதைய சென்னை உயர் அதிகாரி முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை இருந்துள்ளனர். இவர்களுக்கும் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
அவர்களின் திட்டப்படி, சரவண பாபு அலுவலகத்தில் அதிகாலையில் பணத்தை வைத்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















