மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு! டெல்டா விவசாயிகளுக்கு குஷி, ஒகேனக்கல்லில் தடை
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,615 கன அடியில் இருந்து 19,286 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், 44வது ஆண்டாகவும், ஜூன் மாதத்தில் 66 ஆண்டுக்கு பிறகு 2வதாகவும், கடந்த 29ம் தேதி முழுமையாக நிரம்பி 120 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 31,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 18,615 அடியாக சரிந்தது.
இந்நிலையில் இன்று அணையின் நீர்வரத்து 18,615 கன அடியில் இருந்து 19,286 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 24,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 22,100 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 9-வது நாளாக தடை தொடர்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை விளங்குகிறது.. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்த சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததையடுத்து மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





















